
கோட்டகுப்பம் அருகே பெரிய முதலியார் சாவடி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சொந்தமான கொடி கம்பம் உள்ளது.
நேற்று இரவு இந்த பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் சிலர் இந்த கொடி கம்பத்தை வெட்டி பின்புறம் உள்ள காலி மனையில் வீசிவிட்டு சென்றுள்ளனர். அந்த வழியாக சென்ற விடுதலைச் சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சுமார் 50-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் பெரியமுதலியார் சாவடியில் ஒன்று திரண்டனர். அவர்கள் கொடிக்கம்பத்தை வெட்டி வீசிய நபர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த கோட்டகுப்பம் போலீஸ் டி.எஸ்.பி. மித்ரன், இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது குறித்து போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பத்தை சேதப்படுத்திய மர்ம நபர்களை உடனடியாக கைது செய்வோம் என்று கூறியதின் பேரில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் உள்பட அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையோர கோட்டகுப்பம் பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது, இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பெரிய முதலியார் சாவடியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பத்தை சேதப்படுத்திய நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.