
பாண்லேவின் உப தயாரிப்பு பொருட்களின் விலை நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் சார்பு நிறுவனமான பாண்லே, பால் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிர், ஐஸ்கிரீம், பனீர், நெய், குல்பி, பாதாம் பவுடர் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் பால் தவிர்த்த பிற பொருட்களின் விலை, ரூ.2 முதல் 5 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது.


புதுச்சேரியில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களும் நஷ்டத்தில் முடப்பட்டுள்ள சூழலில் தொடர்ந்து நன்றாக இயங்கும் சில நிறுவனங்களில் பாண்லேயும் ஒன்று. இந்நிறுவனம் பொதுமக்களுக்கு அத்தியாவசியமான பால், அதைச்சார்ந்த பொருட்களை தயாரிக்கிறது.
இந்நிலையில், இங்கு பணிபுரிய வேண்டிய முதல் நிலை ஆப்ரேட்டர், முதுநிலை உதவியாளர், முதுநிலை ஓட்டுநர், பால்பொருட்களுக்கான உதவியாளர் ஆகிய 18 பேரை சர்வீஸ் பிளேஸ்மென்ட் என்ற அடிப்படையில் வேறு அலுவலகங்களுக்கு பணிபுரிய அனுப்பியுள்ளனர். இதனால் பாண்லேயில் பணிகள் பாதிக்கப்படுகிறது. இவர்கள் இல்லாததால் இதர ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது. உற்பத்தி குறைந்து வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அதே நேரத்தில் ஆண்டுக்கு ரூ. 64 லட்சம் பாண்லேயில் இருந்து இவர்களுக்கு ஊதியமாக தரப்படுகிறது.
பாண்லே நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.64 லட்சம் ஊதியம் பெற்றுக்கொண்டு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அலுவலகங்களில் பணிபுரியும் 18 ஊழியர்களை மீண்டும் அவரவர் பணிக்கு திரும்ப அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர், தலைமைச்செயலரிடம் சமீபத்தில் மனு தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.