
மழையால் ஏற்பட்ட சேதத்துக்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 300 கோடி கேட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். மஞ்சள் ரேஷன்கார்டுகளுக்கு மழை நிவாரணமாக ரூ. 5000 தரப்படும் என்று அறிவித்தார்.
புதுச்சேரியில் மழை, வெள்ள சேதங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான நான்கு பேர் கொண்ட மத்திய குழுவினர் புதுச்சேரிக்கு இன்று மாலை வந்தனர்.
முதலாவதாக அக்குழுவினர் தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார் மற்றும் அரசு துறை அதிகாரிகளுடன், புதுவையில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து இக்குழுவினர் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை தனித்தனியே சந்தித்தும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
இன்று இரவு புதுவையில் தங்கும் மத்திய குழுவினர், நாளை காலை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்கின்றனர்.
இதையடுத்து முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“புதுச்சேரியில் வழக்கத்தை விட கூடுதலாக மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 130 செமீக்கு பதிலாக ரூ. 180 செமீ மழை பெய்தது. வெள்ளப்பெருக்கால் பாகூர் உட்பட பல பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. புதுச்சேரி, காரைக்காலில் மொத்தமாக 7000 ஹெக்டேர் நெற்பயிர் தொடங்கி பல பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஏராளமானோர் வீடுகள்,கால்நடைகளை இழந்துள்ளனர். மழை சேதம் அதிகளவில் உள்ளது. இடைக்கால நிவாரணமாக ரூ. 300 கோடி கேட்டுள்ளோம். மத்திய உள்துறை அமைச்சருக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம்.
மத்திய அரசு உதவும் என்ற நம்பிக்கையுள்ளது. மத்தியக்குழு ஆய்வுக்கு பின் மேலும் நிவாரணம் கேட்போம்.
மழைக்கால நிவாரணமாக சிவப்பு அட்டைத்தாரர்களுக்கு அளித்ததுபோல் மஞ்சள் ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் தலா ரூ. 5000 தர கோரிக்கைகள் வந்தன. அதனால் மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் ரூ. 5000 வழங்கப்படும். தீபாவளிக்கு அறிவித்த பத்து கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை அடுத்தவாரம் ரேஷன்கடைகள் மூலம் வழங்கப்படும்” என்று குறிப்பிட்டார்.