புதுச்சேரியில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு:
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வந்தது. கடந்த முறை அக்டோபர் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்தது. அதன் படி கடைகள், வணிக நிறுவன ஊழியர்கள் 100% தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும் எனவும், கடற்கரை சாலை, பூங்காக்கள்,தாவரவியல் பூங்காக்கள் அனைத்தும், அனைத்து நாட்களும் வழக்கமான நேரங்களில் முழுமையாக திறந்திருக்கலாம்.
அனைத்து வழிபாட்டு தலங்களும் இரவு 10 மணி வரை திறக்க அனுமதி உள்ளிட்ட பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அத்துடன் வணிக நிறுவனங்கள், காய்கறி, பழக்கடைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், தேனீர் கடைகள் ஆகியவை குளிர்சாதன வசதி இன்றி இரவு 11 மணி வரை இயங்கும் எனவும், மதுக்கடைகள், சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15ஆம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளாக திரையரங்குகள் 100% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி, கோயில் திருவிழாக்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பண்டிகை காலம் என்பதால் மக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.