சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்காமல் செல்ல ‘பாஸ்டேக்’ திட்டம் வருகிற டிசம்பர் மாதம் 1-ந்தேதி முதல் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
“சுங்க கட்டணங்கள் செலுத்த வரிசையில் வாகனங்கள் நிற்பதால் தாமதம் ஆகிறது. இந்தநிலையை தவிர்க்க பாஸ்டேக் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும் அது முழுமையாக செயல்படவில்லை. தற்போது பாஸ்டேக் திட்டம் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் 5 வழிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
வருகிற டிசம்பர் 1-ந்தேதி முதல் இந்த திட்டம் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் அமல்படுத்தப்படுகிறது.
இதன்படி ‘மை பாஸ்ட் டேக்’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து இது தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
சுங்கச்சாவடி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பெட்ரோல் பங்குகள், பொதுச் சேவை மையம் (காமன் சர்வீஸ் சென்டர்) ஆகியவற்றில் பாஸ்டேக் கார்டை பெறலாம். இந்த கார்டுகளை பெற ஆர்.சி.புத்தகம், இன்சூரன்ஸ், வாகன உரிமையாளர்களின் ஆதார் கார்டு ஆகியவற்றை காண்பிக்க வேண்டும். ஒவ்வொரு கார்டுதாரர்களுக்கும் தனி பயன்பாட்டு குறியீடு, ரகசிய குறியீட்டு எண்கள் வழங்கப்படும்.
வாகன உரிமையாளர்கள் தாங்கள் சுங்கச்சாவடிகளை எத்தனை முறை கடந்து செல்வார்களோ அதற்கு தகுந்தவாறு குறைந்தபட்சம் ரூ.150 முதல் அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் வரை கட்டணம் செலுத்தி இந்த கார்டை பெறலாம். கடந்து செல்வதற்கு தகுந்தவாறு கட்டணங்கள் கழித்துக்கொள்ளப்படும். அனைத்து தொகையும் தீர்ந்த பின்னர் மீண்டும் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்”