மக்களவை தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயம் இல்லை, அதே சமயம், பூத் ஸ்லிப் வைத்திருந்தாலும் அதை மட்டும் வைத்துகொண்டு வாக்களிக்க முடியாது என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்றத்தின் 18 தொகுதிகளில் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், சென்னை மாவட்டத் தேர்தல் அதிகாரி பிரகாஷ் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றால் பூத் ஸ்லிப் கட்டாயம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயம் இல்லை. பூத் ஸ்லிப் என்பது வாக்காளரின் பெயர், வாக்குச் சாவடி, வார்டு எண் பற்றிய விவரம் போன்றவைதான் இருக்கும். இதன் மூலம் வாக்களிக்கும் பணி எளிமையாகுமே தவிர, அது முக்கியம் அல்ல.

அதே சமயம், பூத் ஸ்லிப் இருக்கிறதே, அடையாள அட்டைகள் எதுவும் கொண்டு வரவில்லை என்றும் வாக்காளர்கள் கூற முடியாது.
தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் 12 விதமான அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை வாக்காளர்கள் கட்டாயம் கொண்டு வந்தால் மட்டுமே அவர்கள் வாக்களிக்க முடியும் என்று பிரகாஷ் தெரிவித்துள்ளார்.