கோட்டக்குப்பம் இந்திராநகரை சேர்ந்தவர் வீரக்குமார். இவரது மனைவி மகேஸ்வரி. (வயது 45). இவர் இன்று காலை 6.15 மணியளவில் கோட்டக்குப்பம் சறுக்கு பாலம் அருகே பால் வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அங்குள்ள சாலையை கடந்து செல்ல முயன்ற போது காலாப்பட்டில் இருந்து புதுவை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மகேஸ்வரி மீது மோதியது. மேலும் அந்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த கார் மீதும் மோதியது.
இதையடுத்து கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற தனியார் கல்லூரி பஸ் மீது அதிவேகமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் மகேஸ்வரி, மோட்டார் சைக்கிளில் வந்த பிள்ளைச்சாவடியை சேர்ந்த சிவக்குமார் (19), தமிழ் செல்வன் (23) மற்றும் காரை ஓட்டி வந்த ஆந்திராவை சேர்ந்த ஏமன் (21) மற்றும் காரில் வந்த இவரது நண்பர் கிருஷ்ணன் (25) ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே ஏமன் பரிதாபமாக இறந்து போனார். மற்ற 4 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்து தொடர்பாக கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் பலியான ஏமன் சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரியில் படித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.