கோட்டக்குப்பத்தில் பயங்கரம்: வெடிகுண்டு வீசி ரவுடியை கொல்ல முயற்சி
நன்றி : செய்தி மற்றும் படம் உதவி : தின தந்தி குயிலாப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 45) பிரபல ரவுடி. இவரது உறவினர் வீட்டு திருமணம் கோட்டக்குப்பத்தில் நேற்று முன்தினம் நடந்தது. நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ரவுடி மணிகண்டன் கலந்து கொண்டார். இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் அந்த திருமண மண்டபத்தில் இருந்து ஒரு கார் வெளியே சென்றது.
அப்போது 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒரு காரில் அங்கு வந்து இறங்கினர். அவர்கள் திருமண மண்டபத்தில் இருந்து வெளியே வந்த காரில்தான் ரவுடி மணிகண்டன் இருக்கிறார் என்று நினைத்து அந்த காரை மறித்தனர். பின்னர் அந்த காரை சுற்றி வளைத்து காரின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். அந்த வெடிகுண்டுகள் காரின் மீது விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனை தொடர்ந்து 5 பேரும் காரில் ஏறி தப்பி சென்று விட்டனர்.
வெடிகுண்டு சத்தம் கேட்ட உடன் அந்த பகுதியில் இருந்தவர்கள் மற்றும் திருமண வரவேற்பு விழாவிற்கு வந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். குண்டு வெடித்ததில் அந்த காரின் முன்பக்க கண்ணாடி, பின்பக்க கண்ணாடி உடைந்தது. மேலும் அந்த காரில் இருந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தின் போது அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு மொபட்டும் சேதம் அடைந்தது. இந்த சம்பவத்தின் போது ரவுடி மணிகண்டன் அந்த காரில் இல்லாததால் அவர் உயிர் தப்பினார்.
இது பற்றிய தகவல் அறிந்த உடன் திண்டிவனம் போலீஸ் டி.எஸ்.பி. சிலம்பரசன், கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் அரிகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கு சிதறி கடந்த தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரின் மீது வெடிகுண்டுகளை வீசி சென்றவர்கள் யார் என்ற விசாரணை நடத்தி அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.